செய்திகள்
ஊடகவியலாளர் கடத்தல் விவகாரம் : மேஜர் ஜெனரலின் விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை மீண்டும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் அமல் கருணாசேகரவை இன்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியன்று, தெஹிவளை பிரதேசத்திலிருந்து, மேற்படி ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலை, கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியன்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.