காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து வீழ்ந்த 4 வீடுகள்
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெலிகம பகுதி முழுமையாக தாழிறங்கி காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், பொகவந்தலாவை பிரதான வீதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை அடுத்து வீதி நேற்றைய தினத்தை விடவும் இன்று பாரியளவில் தாழிறங்கியிருந்தது.
இதனால் இந்த பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் பெய்த கடும் மழையுடனான காலநிலை நிலவி வந்த நிலையில் முழுமையாக சரிந்துள்ளதுள்ளதுடன், நான்கு வீடுகளும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளன.
நிவ்வெலிகம பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பை அடுத்து, இந்த வீதியை அண்மித்துள்ள மேலும் சில கட்டடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதேவேளை, இந்த பகுதிகளுக்கான போக்குவரத்தை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள மாற்று வீதியை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ,ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணிப்போர் காசல்ரீ, நோட்டன் ஊடாக மவுஸ்ஸாக்கலை சந்தியை அடைந்து அங்கிருந்து ஹட்டனை நோக்கி பயணிக்க முடியும் எனவும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சாரதிகள் பொகவந்தலாவை – டின்சின் சந்தி ஊடாக டிக்கோயா நகரை சென்று அங்கிருந்து ஹட்டன் நகரை நோக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.