செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது
எதிர் வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா சுதந்திரக்கட்சி’ இன்று புதன் கிழமை(20) காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, ஆகிய 5 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-ஜோசப் நயன்