மலையக மக்களின் எதிர்பார்ப்பிற்கு தீர்வு என்ன? மாபெரும் ஆர்ப்பாட்டம்
தங்களுக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்கக் கோரி மலையகத்தில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டயகம – தலவாக்கலை பிரதான வீதியின் திஸ்பனை சந்தியிலும் லிந்துலை நகரிலும் இரு வேறு ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிளாலர்கள் சம்பள உயர்வு கோரி பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
திஸ்பனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினால் தலவாக்கலை – டயகம மற்றும் தலவாக்கலை – எல்ஜின் வீதி ஊடான போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் செலிடோனியா, ஹென்போல்ட், கெளலினா, வாழமலை, திஸ்பனை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மட்டுக்கலை, லென்தோமஸ், லெமினியர், கொனன், வோல்றீம் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றள்ளதுடன், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்திற்கும் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை , நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஜெ. யோகநாதன் தலைமையில் நுவரெலியா பீற்று தோட்ட பொது மக்கள் இன்று பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நுவரெலியா நகரில் நடத்தியுள்ளனர்.