மைத்திரிபால சிறிசேனவின் எந்த சதித்திட்டங்களுக்கும் துணை போகப் போவதில்லை
எதிர்காலத்தில் 122இற்கும் அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான சக்தி ஐக்கிய தேசிய முன்னணியிற்கு உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக்குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனவரி மாதத்தில் பொது தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும்.
முடிந்தால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் 122இற்கும் அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்போம். நிரூபிப்பதற்கான சக்தி ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்த சதித்திட்டங்களுக்கும் துணை போகப் போவதில்லை. அஞ்சப் போவதுமில்லை.
எதுவானாலும் சந்திக்க தயாராகவே உள்ளோம். ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்துடன் போராடி மீண்டும் எங்களின் ஆட்சியை கைப்பற்றுவோம்.