மஸ்கெலியா நிருபர் செ.தி.பொருமாள்.02.09.2023.
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் பெரண்டினா நிறுவனம் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் வருமானம் குறைந்தகுடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படைவசதிகள் மேம்பாட்டிற்காக பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் ஊடாக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேப்போல், நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பெரண்டினா நுன்நிதி நிறுவனத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன் வசதிகள் செய்துக் கொடுப்பதோடு, கடன் நோக்கத்திற்கேற்ற பயிற்சிகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வியாபார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்யப்படுகின்றது.
மேலும், கடன் வழங்குதல் மூலம் கிடைக்கும் வருமானத்தை நலன்புரி சேவைகள் பலவற்றை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகின்றது.
அந்தவகையில், 2022 டிசம்பர் மாதம் வரையிலும் கடன் பெற்று, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் தங்களது வியாபார செயற்பாடுகளை முறையாக செய்துக் கொள்வதில் இடர்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பெரண்டினாவின் ‘லைப் லைன்’ வேலைத்திட்டத்தின் மூலம் ரூபாய் 3,500.00 பெறுமதியான முத்திரைகள் நாட்டிலுள்ள சுமார் 80,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றதுடன், இதன் மொத்த பெறுமதி 280 மில்லியன்களாகும்.
பெரண்டினா நுன்நிதி நிறுவன ஹட்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முத்திரைகள் வழங்கும் நிகழ்வு இன்று மஸ்கெலியா அம்பாள்ஸ் திருமண மண்டபத்தில் நுன்நிதி அதிகாரி சுரேன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக, பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் சிவகாந்த், பெரண்டினா நுன் நிதிநிறுவனத்தின் கிளை முகாமையாளர் பிரசன்னா, சமயத் தலைவர்கள், அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. மோகனராணி, சென்ஜோசப் கல்லூரியின் அதிபர் திரு.பரமேஸ்வரன், பிரதேசகிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் கலந்துக் கொண்டதுடன், மஸ்கெலியா, பிரவுண்லோ, சீத்தகங்குல குடா மஸ்கெலியா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் இம் முத்திரையினை அருகிலுள்ள தபாற் கந்தோர்களில் சமர்ப்பித்து 7 நாட்களுக்குள் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, இப்பணத்தை அவர்கள் ஈடுபடும் வியாபார செயற்பாடுகளில் முதலீடு செய்ய முடியும்.
அத்தோடு, ஹட்டன் நுன் நிதி கிளையினூடாக மாத்திரம் சுமார் 7500 ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதன் மூலம் நன்மையடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.