இலங்கையின் இளம் இயக்குனர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பவனீதா லோகநாதன். போட்டி மிக்க சர்வதேச சினிமாவில் நுழைந்து தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறார். அதுவும் இவருடைய 46 Mondays திரைப்படம் மூலமாக சர்வதேச சினிமாவில் மலையக மக்களைப்பற்றிய பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அதன் அடுத்தகட்டமாக தற்போது இந்தப்படம் அவுஸ்திரேலியாவிலுள்ள Asia Pacific Screen Lab 2024 க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
46 Mondays ஒரு உண்மை கதையாகும். கொழும்பில் வாழும் மலையகத்தமிழர்களின் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை முதலில் பங்களாதேஷ்க்கு எடுத்து சென்ற பவனீதா லோகநாதன் அங்கே மலையக மக்களை பற்றிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார். அடுத்து தென்கொரியாவில் 8 மாதங்கள் தங்கியிருந்து படத்தினை மேம்படுத்தியவர், ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான பூசான் திரைப்பட விழாவின் திரைப்பட சந்தையில் தனது படத்தை அறிமுகப்படுத்தினார். அங்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் இலங்கை தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றதோடு மலையக தமிழர்கள் பற்றிய பெரும் கவனத்தை ஏற்படுத்தினார்.
அங்கே அவருடைய படம் நல்ல பாராட்டுக்களை பெற்றதோடு இந்தப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பலரும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சினிமாவின் புதிய இளம் நம்பிக்கையாக கருதப்படும் பவனீதா லோகநாதன், தற்போது அவுஸ்திரேலியாவின் கெளரவம் மிக்க Asia Pacific Screen Lab 2024 க்கு தெரிவு செய்ப்பட்டுள்ளார். உலகம் முழுவதுமுள்ள பல இயக்குனர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்துள்ளனர். எந்த வருடமும் இல்லாதளவு இந்த வருடம் பல நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பிய நிலையில் கடுமையான போட்டி நிலவிய சூழலில் பவனீதா லோகநாதனின் “46 Mondays ”
தெரிவு செய்யப்பட்டு இலங்கை சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
2024 இல், வருடம் முழுவதும் படத்தின் இரண்டாம் கட்ட திரைக்கதை மேம்படுத்தல்களை இவர்களோடு பயணித்து உருவாக்கவுள்ளார் பவனீதா லோகநாதன். அந்த ஒருவருடமும் மலையக தமிழர்கள் பற்றிய கவனத்தை அங்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
பவனீதா லோகநாதனை சமிபத்தில் மலையகம்.lkஇல் நேர்காணல் செய்திருந்தோம். அப்போது ஒரு குறிப்பிட்ட விடயத்தை பதிவு செய்திருந்தார். தனது கடுமையான உழைப்பின் பலனாக தொடர் சாதைனைகள் பெற்றுவந்தாலும் சர்வதேச பயணங்களுக்கான பணமில்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார். இதுபோன்று நாட்டை கெளரவிக்கும் இளம் கலைஞர்களுக்கு மற்ற நாடுகளில் அரசாங்கம் உதவுகிறது. அல்லது அந்த நாட்டின் கலையமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் உதவி செய்து அந்த இயக்குனர்களையும் தங்கள் நாட்டையும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்கின்றனர். அவர்களால் மிக இலகுவாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் தனக்கு இதுபோன்ற உதவியும் ஆதரவும் இல்லாததால் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றதாக தெரிவித்தார். இந்த வெற்றியை தாண்டி விமான டிக்கெட்டுக்கு எப்படி பணம் திரட்ட போகிறோம், எப்படி செலவுகளை சமாளிக்க போகிறோம் என்ற கவலை வருவதால் தனக்கு தன்னுடைய வெற்றியை அனுபவிக்கும் மனநிலை எப்போதுமே கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார். தற்போது கூட ஜனவரியில் பங்களாதேஷ் பயணத்திற்கான பணத்தை திரட்ட தடுமாறி வருவதாக நேர்காணலில் தெரிவித்தார்.
தேசத்தை பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கலைஞருக்கு தேவையான உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களால் இலக்கை அடைய முடியாது போகும் சூழல் ஏற்படும் என்பதை பலரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல சாவல்களுக்கு மத்தியில் மனம்தளராமல், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் யாருடைய உதவியுமின்றி
பல நாடுகளுக்கு பயணித்து தனியொருத்தியாக பல சாதனைகளை செய்து வருகிறார் பவனீதா லோகநாதன். மலையகத்தின் முதல் பெண் இயக்குனராக கருதப்படும் பவனீதா லோகநாதனின் சாதனைகள், இலங்கை சினிமாவின் புதிய அத்தியாயத்தை சத்தமில்லாமல் எழுதிவருகின்றது என்பது கண்கூடு.