மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம்- மாத்தளை மாநகரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே
அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
மாத்தளையில் கோயில் கொண்ட மாமணியே தாயே
மருள் போக்கி நலமளித்து வாழவைப்பாய் நீயே
தீமைகளைத் துடைத்தெறிய துணையிருக்கும் தாயே
தீய பகை கொடுமைகளைக் களைந்திடுவாய் நீயே
பாடித் துதித்துன் பாதம் பற்றுகின்றோம் தாயே
பாரினிலே நிம்மதியை நிறுவிடுவாய் நீயே
வாழ நல்ல வழிகாட்டி வளமளிக்கும் தாயே
வாழ்விற்கு ஒளியேற்றி நன்மை செய்வாய் நீயே
மலைசூழ்ந்த நன்னகரில் இருந்தருளும் தாயே
மலைத்து நிற்போர் மனக்கவலை போக்கிடுவாய் நீயே
உயர்ந்த நகர் குடியிருந்து கருணை செய்யும் தாயே
உரிய நல்ல நேர் வழியைக் காட்டிடுவாய் நீயே
நேர்மை மிகு பெருவாழ்வு வாழவேண்டும் தாயே
நேர்வழியைக் காட்டியெம்மை ஆட்கொள்வாய் நீயே
கேட்ட வரம் தந்தெமக்கு அருள் அளிக்கும் தாயே
கேடில்லா வாழ்வு தந்து உயர்வளிப்பாய் நீயே
ஏற்றமிகு பெருவாழ்வு வாழ வேண்டும் தாயே
ஏற்றவழி காட்டி யெம்மை வழிநடத்து நீயே
மாரியம்மா என்றழைக்க வந்தருளும் தாயே
மாண்புமிகு வாழ்வு தந்து அரவணைப்பாய் நீயே
உன்பாதம் சரணடைந்தோம் காத்திடுவாய் தாயே
உடனிருந்து உறுதுணையாய் இருந்திடுவாய் நீயே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.