டி சந்ரு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16.06.2023) மாலை 04 மணியளவில் இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த (வயது 25) (வயது 40) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க
மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது சரிந்து விழுந்து குறித்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் ஏனைய தொழிலாளர்களும், அப்பகுதி வாசிகளும் ஈடுப்பட்டுள்ளனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் மண் அகற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதையுண்ட இருவரும் மாமன் மருமகன் என தெரியவந்துள்ளது
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.