மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம், அட்டன்- டிக்கோயா போடைஸ் தோட்டம் – அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில்
மலை சூழ்ந்த திருவிடத்தின் மத்தியிலே கோயில் கொண்ட விநாயகரே
மகிழ்ச்சி நிறை வாழ்வினையே எமக்கென்றும் தந்திடையா
அமைதி நிறை பெருவாழ்வை நாம் என்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே
வளம் கொண்ட நிலத்தினிலே வந்துறையும் விநாயகரே
வற்றாத கருணையினை எமக்கென்றும் தந்திடைய்யா
எதிர்காலம் மேன்மையுற்று நாமென்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே
வேழமுகம் கொண்டெமக்கு காட்சி தரும் விநாயகரே
வேதனை அணுகாத வாழ்வினையே எமக்கென்றும் தந்திடைய்யா
இன்பம் நிறை பெருவாழ்வை நாமென்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே
போடைஸ் பெருந் தோட்டம் இருந்தருளும் விநாயகரே
போதும் என்ற நிறைமனதை எமக்கென்றும் தந்திடைய்யா
பாரினிலே நிம்மதியைப் பெற்று நாமென்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே
அனைத்துயிரும் ஒருங்கிணைத்து காத்தருளும் விநாயகரே
அஞ்சாத மனவுறுதி எமக்கென்றும் தந்திடைய்யா
நிம்மதி நிறை பெருவாழ்வை நாமென்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே
நம்பிக்கை தந்தெமக்கு நலம் அளிக்கும் விநாயகரே
தவறில்லா மனநிலையை எமக்கென்றும் தந்திடைய்யா
திருப்தி நிறை பெருவாழ்வை நாமென்றும் வாழ்வதற்கு
உறுதுணையாய் இருந்திடைய்யா எங்கள் திருவிநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.