மலையக முன்னேற்ற கழகத்தினால் அப்பர்கிறன்லியில் பாடசாலை திறந்து வைப்பு.
அக்கரப்பத்தனை – அப்பர்கிறன்லி தமிழ் வித்தியாலய பாடசாலை மிக நீண்ட காலமாக கொழுந்து நிறுக்கும் மடுவத்தில் இயங்கிவந்த நிலையில் இதுகுறித்து கவனம் செலுத்திய மலையக முன்னேற்ற கழகம் அதனை பாடசாலை கட்டிடமாக மாற்றியமைத்து பாடசாலை நிராவாகத்தினரிடம் கையளிக்கும் திறப்பு விழா நேற்றைய தினம் (29) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோட்ட கல்வி பணிப்பாளர் கிருபாகரன், PSI அதிகாரி உதயகுமார், பிரதேச இணைப்பாளர்
ஸ்டீபன், மலையக முன்னேற்ற கழக தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், கழக உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.
காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் அதிதிகளை வரவேற்கும் நிகழ்வும் கொடியேற்றும் வைபவமும் பாடசாலை கட்டிடத்திற்க்கான கல்வெட்டு திரை நீக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. மேலும் விஷேட விருந்தினர்களால் பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றிருந்தது.
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தது சிறப்பம்சமாகும்.
ரா.கவிஷான்
கேம்பிரி – லிந்துலை