இலங்கையிலும் முழு நீளத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மலருக்கு நீர்வார்த்திருக்கிறது ஜெகன் சுப்பிரமணியம் எழுதி, இயக்கித் தயாரித்தளித்திருக்கும் “இரானி” திரைப்படம்.
முன்னணி நடிகர்களைக்கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் சில படங்களை இலங்கையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் இலங்கை நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா முதலான நடிகர்கள் நடித்த படங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கொடிகட்டிப் பறந்திருக்கின்றன.
இரானி படத்தில் நடிகர் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் இலங்கையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படமும் நிச்சயம் இலங்கையிலும் இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்கும் என்று நம்பிக்கையைத் தந்திருக்கிறார் ஜெகன் சுப்பிரமணியம். அவரது இரானி கதைப் பின்னல் அவரின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறது.
படத்தின் கதை நகர்வைக் காட்சிக்குக் காட்சி புதிய திருப்பங்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இயக்கியிருக்கிறார் ஜெகன்.
நடிகர் ராஜ்குமார் தனது ஒட்டுமொத்த திறமையையும் இரானி படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தப் பாத்திரத்தையும் தன்னால் திறம்பட நடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார். இரானி அவருக்குக் கதாநாயகன் அந்தஸ்தைத் தந்திருக்கும் படம். அடுத்தடுத்துத் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் படங்கள் அவருக்குக் கதாநாயகன் வாய்ப்பை வழங்க இரானி கைகொடுக்கும் என்றால் மிகையில்லை.
இலங்கையிலும் இந்தியாவிலும் (கேரளா, சென்னை) படமாக்கப்பட்டிருக்கும் இரானி தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் தமிழில் திரைக்கு வந்திருக்கும் இரானி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே வரவேற்பு இந்தியாவிலும் கிடைக்கும். சிங்களத்திலும் திரைக்கு வரும்போது இரானி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடும்.
தன் கைக் குழந்தையையும் மனைவியையும் விட்டுப் பிரிந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி மீண்டும் அடைய போராடும் கணவனின் நியாயமான கோபமே இரானி.
கணவன் இரானி (ராஜ்குமார்) எதிரியின் சதியிலிருந்து உயிர் தப்பி இலங்கையின் கண்டியில் தியாகு (அனில் ஜயசிங்க) என்பரால் அடைக்கலம் வழங்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். இரானி அடைக்கலம் பெற்ற தியாகுவின் வீட்டில் அவனின் மகள் ரேவதி( ரெஜினா கிறிஸ்தொபர்)வாழ்ந்து வருகிறாள்.
இரானி எதிரிகள் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் போராட்டத்தை மிக அருமையான கதையாகப் பின்னியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் சுப்பிரமணியம்.
தன் மனைவி சிக்கியிருக்கும் அரசியல் சதிகாரர்களின் வலையைச் சிதைப்பதற்கு இரானி முன்னெடுக்கும் முயற்சியின்போது சிலரைப் பழிவாங்க வேண்டிய நிலை உருவாகிறது. அப்போது பொதுவான நியதிகளுக்கும் அப்பால் பழிவாங்கும் இரானி குடும்பத்துடன் மீண்டும் வாழ்கிறானா என்பதை திகில் நிறைந்த காட்சிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இரானியின் வெற்றி இலங்கை தமிழ்த் திரைப்படத் துறைக்குப் புத்துயிர் அளிக்கட்டும். ஜெகன் சுப்பிரமணியத்தின் அடுத்த படத்துக்கு உந்துதலாக அமையட்டும்.
இரானி – பழிவாங்கலுக்கு நியதி இல்லை
பார்ப்பவர்களுக்குத் தளர்ச்சி இல்லை
இதயநிலா சுகன்ஜி


