இன்று (12) காலை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்கம, அராலிய உயன மாவடவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவரே இவ்வாறு ரயிலில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி உட்பட 18 பேர் எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த போது இன்று காலை 6.30 மணியளவில் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டபோது, ரயிலில் இருந்து இறங்கி மீண்டும் ரயிலில் ஏறிய போது தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி உடனடியாக தியத்தலாவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப சேபால ரத்நாயக்க தலைமையில் பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ராமு தனராஜா
