சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் தங்களிடம் தீர்வு உள்ளதாக பொலன்னறுவையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய, விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்து, நுகர்வோருக்குக் குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும்.
விவசாயிகளின் அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசாங்கம் கொள்வனவு செய்து, அதில் ஒரு பகுதியை தங்களுக்கு வழங்குமாயின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் எனவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது, பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் பெருந்தொகையான நெல்லை பதுக்கி வைத்திருப்பதனாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்களுக்கு அதிகளவில் நெல் கிடைக்குமாயின், பாரியளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்களை விடவும் அதிகளவு அரிசியை சந்தைக்கு வழங்க முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எனவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அரிசி விநியோகம் செய்யப்படாததால் மூடப்பட்ட மரந்தகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசி விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அரிசி வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக எதிர்வரும் 20ஆம் திகதி வரை 70,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் ஜனவரி 10 ஆம்திகதி வரை தனியார் இறக்குமதியாளர்களுக்கும் இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
