கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்து வந்த ‘சுப்பிரமணியன்’ எனும் நாய் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய 21 வயது சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27) மாலை கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பாதயாத்திரைக் குழுவினருடன் ‘சுப்பிரமணியன்’ என்று பெயரிடப்பட்ட நாய் ஒன்றும் தொடர்ந்து பயணித்து வந்துள்ளது. இந்நிலையில், கல்முனைப் பகுதியை அவர்கள் கடந்து சென்றபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவரால் அந்த நாய் கொடூரமான முறையில் உதைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
வாய் பேசாத பிராணி மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. இதற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கோரி குறித்த இளைஞர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும், இந்து அமைப்புகளும் தங்களது பலத்த கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பிரதம பரிசோதகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை இன்று மாலை கைது செய்தனர்.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் கல்முனைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
