ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!
கண்டி: மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று பேராசிரியர் சரத் அபேகோன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டது என பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் இதற்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (Vice Chancellor) சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
