பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களைப் பணத்திற்காக விற்கும் இணைய மோசடி குறித்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சு, ஆரம்பக்கட்ட விசாரணைத் தகவல்களை இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.
போலி கணக்குகள் மூலம் சொந்தக் குடும்பப் பெண்களின் புகைப்படங்களையே விற்பனை செய்ய சிலர் முயல்வதும், இவ்வாறான பெரும்பாலான குழுக்கள் வெளிநாடுகளிலிருந்தே இயக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் நண்பர்கள் குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக உளவியல் சமூக ஆலோசனைகளை (Psychosocial counseling) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும்.
