டி .சந்ரு,திவாகரன்
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று பகல் 3.30 மணியலவில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பத்தில் நானு ஒயா ரதல்ல தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர் கதிர்வேலு சுப்பிரமணியம் (வயது 52) என்பவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் நாளை (12) பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலையை சிரமதானம் செய்த பின்னர், லூசா கல்கந்தை தோட்டத்துக்கு வழமை போல ரயில் பாதையில் நடந்து சென்ற வேளையில் ரயில் மோதி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில் இந்த கோர சம்பவத்தி்ல் இவர் மீது மோதிய ரயில் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதாகவும் பின் ரயில் பாதை கண்காணிப்பு ஊழியர் ஒருவர் ரயில் பாதையில் வருகை தந்த போது அதிபரின் உடல் கிடந்ததை கண்டு நானு ஓயா ரயில் நிலையம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சடலம்பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகளின் பின் வீட்டாரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.