2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தபால் திணைக்களத்தின் வருமானத்தில் 71% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
உலக தபால் தினத்தை (09) கொண்டாடும் வகையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடம் திறைசேரி வழங்கிய 12,000 மில்லியன் ரூபா இலக்கை தாண்டி தபால் திணைக்களம் அதிக வருமானமத்தை ஈட்டியுள்ளது. ஊழியர்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை மேற்கொள்ள முடிந்தது. தபால் திணைக்களம், ஆகஸ்ட் மாதமளவில் தனது வருமானத்தில் 72% முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தபால் திணைக்களத்தை வலுப்படுத்தி உலகின் ஏனைய வளர்ந்த நாடுகளைப் போல, தபால் திணைக்களத்தின்; பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட தபால் மா அதிபர் S.R.W.M.R.C. சத்குமார, தபால் சேவையை வர்த்தக சேவையாக மாற்றுவதன் மூலம் திறைசேரிக்கு சுமை வழங்காது முன்னோக்கிச் செல்ல முடியும் என்றார். தபால் திணைக்களத்தினால் சர்வதேச கூரியர் சேவை, சர்வதேச இ.எம்.எஸ், கேஷ் ஆன் டெலிவரி போன்ற புதிய முறைகளை; நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இவை வருமானம்; ஈட்டும் முறைகளாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அஞ்சல் என்பது வெறும் பாரம்பரிய கடிதப் போக்குவரத்து மட்டும் அல்ல என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இதை இலாபகரமான திணைக்களமாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
