முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் இன்றைய தினம் விசேட ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனித புதைகுழியின் ஆழம் தொடர்பான ஆய்வுக்காகவே இந்த ஸ்கேன் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், நான்காவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இதுவரையில், 26 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் காவல்துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
