சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள பிளிகுத்துவ ரஜமஹா விகாரையைச் சூழவுள்ள பகுதியில் கம்பஹா நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் கலைஞர்கள் ஆய்வுச் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர். உலக நகரங்கள் திட்டமிடல் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (24) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும். அந்தத் திட்டத்தின் கீழ், பிளிகுத்துவ ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள பகுதியை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு “பிளிகுத்துவவிற்கு பயணம்” ( Travel to Pilikuththuwa) என்று பெயரிடப்பட்டுள்ளது.
400 – 450 அடி உயரமான குன்றொன்றை உடைய 250 ஏக்கர் அளவு நிலத்தில் இந்த பிளிகுத்துவ குன்று அமைந்துள்ளது. அதில் 52 ஏக்கர் அளவு நிலம் பிளிகுத்துவ ரஜ மஹா விகாரைக்குச் சொந்தமானது. பிளிகுத்துவ ரஜமஹா விகாரையின் நிலம் நாட்டில் மிக அதிகளவு குகைகளை உடைய விகாரையாகக் கருதப்படுகின்றது. மேல் மாகாணத்தில் உள்ள மிக அதிக குகைகளை உடைய ரஜமஹா விகாரையும் இதுதான். இங்கு 99 கற்குகைகள் அளவு இருக்கின்றன. அத்துடன் நீர் வழிந்தோடாத வகையில் விளிம்பு வெட்டப்பட்ட குகைகள் சிலவற்றையும் இங்கு காண முடியும். அவ்வாறான விளிம்புகளை உடைய குகைகளுக்குள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மனிதர்களும் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பிளிகுத்துவ ரஜமஹா விகாரைக்குரிய பூமியின் வரலாறு கி.மு 3 ஆம் நூற்றாண்டு வரையான வரலாற்றை நோக்கி நீளுகின்றது. அந்தக் காலத்தில் இந்தக் காடு பெளத்த துறவிகளுக்கு தியானம் செய்வதற்குப் பொருத்தமான சூழலாக அபிவிருத்தி அடைந்திருந்ததாக தொல்பொருள் திணைக்களத்தின் ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றது. இந்த விகாரை தேவாநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்தில் காடொன்றாக இருந்ததாகவும், வலகம்பா மன்னருக்கு பாதுகாப்பு வழங்கிய இடங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது. இந்தப் பகுதியில் செய்யப்பட்ட அகழ்வுகளில் பண்டைய புதைபடிவங்கள், சிவப்பு மட்பாண்டத் துண்டுகள், மணிகள், கல் உபகரணங்கள் மற்றும் பொலன்னறுவை காலத்திற்குரிய நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தின் பிரதான பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹேமால் லக்பதும் தலைமையில் இந்த ஆய்வுச் சுற்றுலா நடத்தப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் கம்பஹா, களுத்துறை மற்றும் மேல் மாகாண அலுவலகங்களைச் சேர்ந்த திட்டமிடல் உத்தியோகத்தர்கள் இந்த ஆய்வுச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்

