இலங்கையின் கிராமிய கலைகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தினகரன்,தினகரன் வாரமஞ்சரி மற்றும் மலையகம்.lk ஊடக அனுசரணையுடன் அறநெறி பாடசாலைகளுக்கு இடையிலான “கொரோனாவின் தாக்கத்தால் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதார வீழ்ச்சி” எனும் தொனிப் பொருளில் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ஆடற் கலை போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி 2024.03.02 ஆம் திகதி நேற்றைய தினம் கொழும்பு 07 புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் வீரகேசரி பத்திரிக்கையின் நிறைவேற்று பணிப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு நீர் வழங்கல் மற்றும் பெருந் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இணைய தொடர்பாடல் தொழிநுட்ப்பத்தின் வாயிலாக வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் பிரதம நடுவராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் கடமையாற்றினார்.
போட்டியின் முதலாம் இடத்தை பெற்று 100,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசினை கண்டி, இந்து மாமன்ற அறநெறி பாடசாலையும் ,இரண்டாம் இடத்தை பெற்று 50,000 ரூபாய் பணப்பரிசினை பதுளை,கங்தேகெதர ஸ்ரீவாளி அறநெறி பாடசாலையும் மூன்றாம் இடத்தை பெற்று 25,000 பெறுமதியான பணபரிசினை கொழும்பு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய அறநெறி பாடசாலையும் தட்டிச் சென்றன.
தினுஷ்கர்





