பசறை நிருபர். 11.12.2024
விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி ஜனாதிபதிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக 6 கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் தொடர்பான பணிப்பாளர் நாயகம் டி.கமகே கடிதம் மூலம் பதில் வழங்கியுள்ளதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஊழலற்ற ஜனாநாயக ஆட்சியை நடத்துவதற்காக நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளதோடு, அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இவ் வெற்றியில் மலையக மக்களும் பங்குதாரர்களாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்நிலையில் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தல், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கும் பொறிமுறையினை கம்பனி நிர்வாகங்களுடன் கலந்துரையாடி உருவாக்குதல், பெருந்தோட்டத்துறையில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கல், பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தல் , ஏனைய அரச, தனியார் துறைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் பெற்றுவரும் அனைத்து வரபிரசாதங்களையும், தொழில்சார் உரிமைகளையும், சலுகைகளையும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்று கொடுத்தல், பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மானிய விலை அடிப்படையில் உலர்உணவு பொருட்கள், கற்றல் உபகரணங்களை வழங்குதல், நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர தீர்வினை அரசியல் ரீதியாக வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஊழலற்ற ஆட்சியின் ஊடாக அனைத்து இன மக்களும் இணைந்து வாழும் சகஜமான சூழலை நாட்டில் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கையாக முன் வைத்திருந்தேன்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு – அழகிய வாழ்கை” என்ற தேர்தல் விஞ்ஞாபன பிரகடனத்தின் படி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பதில் கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது என்றார்.
