வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்த பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (23) இரவு 9:45 மணியளவில் எலக்கட வீதியில் அமைந்துள்ள ‘Villa by the edge’ விழா மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ‘குடு ரொஷான்’ எனப்படும் துப்பஹி ஆரச்சிகே பிரசாத் ருவானின் உதவியாளரான (சீடன்) வநாத முல்லே சுமேதா (39 வயது) என அறியப்படும் எச். மகேஷ் மதுசங்க என்பவராவார்.
துப்பஹி ஆரச்சிகே ரந்தவ் (45 வயது) என்பவரது மகளின் பிறந்தநாள் விழாவிலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவர் ‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரராவார்.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருப்பு நிற காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு பிஸ்டல் (Pistol) ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கருப்பு நிற கார், ஜா-எல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இக்காரை ஜா-எல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
