*ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி – மனநிலை பாதிப்பு; கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு – கொழும்பில் சம்பவம்*
ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள், வகுப்பாசிரியையினால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாணவி கடுமையான சுகயீனத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில், வைத்தியர்களின் மேலதிக பரிசோதனைகளில், மாணவிக்கு ஏற்பட்டுள்ள நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பாடசாலையின் அதிபரிடம் விபரத்தை தெரிவித்து வகுப்பு மாற்றம் கோரப்பட்டபோது, அவ்வாறு மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதிய வகுப்புக்குச் சென்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்ட வகுப்பாசிரியர் மற்றைய ஆசிரியருடன் முரண்பட்டதாகவும், அதன் பின்னர் குறித்த மாணவி அந்த வகுப்புக்குச் செல்லாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிபர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த மாணவியின் தாயாரான ஆசிரியரிடம் பாடசாலையின் உப அதிபர்கள் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு, மாணவி திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் பேசியதாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தமக்கும், தமது பிள்ளைக்கும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதையும், பழிவாங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதையும் உணர்ந்த தந்தை, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது, வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம், பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறாது, தாயாரான ஆசிரியர் மீது அழுத்தம் வழங்கப்படாது என உறுதிமொழிகள் வழங்கியதைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமானதாக மாறியுள்ளது. குறித்த பாடசாலையோடு நின்றுவிடாமல், ஏனைய பாடசாலைகளுக்கும் இவ்விடயம் பரவியுள்ளது. பாடசாலைக்குள்ளும் வெளியிலும் தாயாரான ஆசிரியர் மீது மோசமான சேறு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தந்தை மோசமானவர், சண்டைக்காரர் போன்ற கதைகள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றைத் தாண்டி, பிற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவியின் இரு சகோதரர்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டாம் தர மாணவனான மாணவியின் தம்பியிடம், “தரம் 05-க்கு வரும் போது தான் சம்பவம் செய்கிறேன்” என ஒரு ஆசிரியர் கூறியதாகவும், குறித்த பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து, தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தளவுக்கு மோசமான செயல் என பெற்றோர் விசனம் வெளியிடுகின்றனர்.
பாடசாலைக்குச் செல்லவே பயந்து போயுள்ள பிள்ளை, இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு பாடசாலைக்குச் செல்ல முடியும் என்றும், பிள்ளையின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? யார் பாதுகாப்பு வழங்குவார்கள்? என்றும் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
சுமூகமாக முடித்து வையுங்கள் என்ற கோரிக்கையுடன் சென்ற குறித்த பிள்ளைக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள அநீதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இவ்வாறான சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளால் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு பாடசாலைகளில் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு மாணவிக்கு மட்டுமே நடைபெற்ற அநீதி அல்ல. பலருக்கும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பயம் மற்றும் போதிய விழிப்புணர்வு இன்மை காரணமாக பல பெற்றோர் சத்தமின்றி இத்தகைய பிரச்சினைகளை சமாளித்துக்கொண்டு செல்கின்றனர் என்பதே உண்மையாகும்.
