வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரு இலங்கை இளைஞர்கள், சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது தனுஷ்கோடியில் வைத்து இந்தியக் கடலோரக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா மற்றும் வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க இலங்கை காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் இந்தியக் கடலோரக் காவல்படையின் தீவிர ரோந்துப் பணியின் போதும், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதி வழியே ஊடுருவிய இவ்விருவரும் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியத் தரப்பிடம் உத்தியோகபூர்வக் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடைந்ததும், இன்னும் ஒரு வார காலத்திற்குள் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
