*காணியுரிமை தொடர்பான காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு*
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில்,,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கக் கூடிய காத்திரமான முன்மொழிவுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியாக மலையக விடியலுக்காக குரல் கொடுத்து வரும் சமூக,சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான சாத்தியப்பாடுகளுக்கு மலையக சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு அத்தியாவசியம் என அமைச்சின் சார்பில் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான ஆலோசனைகளும் சிவில் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மலையக மக்களின் பிரச்சினைகள் சென்றடைந்துள்ளமை .இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
காணி உரிமையின் பங்களிப்பு,காணி வழங்குவதில் ஏனைய சமூகத்தினரின் அங்கீகாரம்,சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்,,அதற்கான உபாயங்கள், அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், மலையக வீடமைப்புத் திட்டங்களுக்கான காணி உரிமை பத்திரங்களை வழங்கும் பணி NEVIDAவிடம் காணப்படும் அதேவேளை NEVIDAவிடம் காணப்படும் நிதி பற்றாக்குறைால், காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதங்களும் எதிர்காலத்தில் திறைசேறியிலிருந்து நிதி நெவிடாவுக்கு ஒதுக்கப்படுமாயின் ஏற்படும் நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும் தோட்டங்களில் உள்ள தேயிலை காணிகளைத் தவிர்த்து தரிசு காணிகளை அரசாங்கம் பொறுப்பேற்றால் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்டாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது..
முக்கியமாக காணி உரிமைக்காக ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் framework policy decision, ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

