முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதையோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க ஏப்ரல் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் லிவேராவை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து, திங்கட்கிழமை (24) ரிஐடிக்கு வருகை தரத் தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் ஊடாக லிவேரா, மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
