பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய அமைச்சர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தகுந்த சூழல் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துக்கொண்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்பதோடு, அவர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், புதிய விநியோகஸ்தர்களின் விநியோகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
