இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இந்த இணைய சேவை வசதிக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்நு (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வேகமான இணையச் சேவையை இதன் ஊடாக வழங்க முடியும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த இணைய வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்கை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது “Starlink” வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் சுமார் 2000 Starlink (ஸ்டார்லிங்க்) வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 32 நாடுகளில் ஏற்கனவே அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
