அரசியல் தலையீடுகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளினால் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி இயக்கம் புத்துயிர் பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
புதிய திட்டமானது “புதிய கிராமம் – புதிய நாடு” என்று பெயரிடப்பட்டுள்ளது, இது ஒரு சாதகமான காரணி நிலையில் இருந்து உற்பத்தி நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான மூலோபாய செயற்பாடுகளை அடையாளம் காணும் செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் இன்று இடம்பெற்று வருகின்றன. அதன்படி சமுர்த்தி இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை களப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் எழும் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் சமுர்த்தி இயக்கமும் ஒன்று. அதற்காக அரிசி பங்கீட்டு முறை, உணவு முத்திரை முறை, ஜனசவிய திட்டம், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன.
சமுர்த்தி இயக்கத்தை வலுப்படுத்தும் திட்டம் இரண்டு கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இது ஒரு முன்னோடி திட்டம் மற்றும் தேசிய திட்டமாகும்.
வலுவூட்டல் முன்னோடித் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி, உலக வங்கி நிதியுதவி மற்றும் ஜப்பானிய சமூக அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 03 நிதியுதவியின் கீழ் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி முன்னோடித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 13 மாவட்டங்களில் அமைந்துள்ள 64 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 400 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 10,000 குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். அதற்காக 2,223.14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 150,000 ரூபாய். களுத்துறை, குருநாகல், கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னோடித் திட்டம் 74 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 395 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இதன் கீழ் 6,000 குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டம் 2027 வரை செயல்படும். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,560 மில்லியன் ரூபாவாகும்.
ஜப்பான் சமூக அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முன்னோடி திட்டத்திற்கு இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஆறு மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மற்றும் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக 8,400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய திட்டத்தின் கீழ் 12 இலட்சம் “அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கீழ் 2024 ஆம் ஆண்டில் 03 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த தேசிய வேலைத்திட்டம் முழு நாட்டையும் உள்ளடக்கியது. இந்த ஆண்டிற்காக திறைசேரி 14,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கான பிரதான இயக்கம் சமுர்த்தி இயக்கம். இது மானியத் திட்டமாக மட்டுமின்றி சமூக நலத் திட்டமாகவும் செயல்படுத்தப்பட்டது. சமுர்த்தி இயக்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சமுர்த்தி இயக்கத்தை பாதுகாப்பது இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதனால்தான் சமுர்த்தி இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. இதற்காக பிரதமர் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமுர்த்தி இயக்கம் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் பல்வேறு அரசியல் தவறுகளாலும் பல்வேறு மக்கள் தேவைகளாலும் பின்னடைவை சந்தித்தது. சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார். ஏனெனில் இந்தச் சூழ்நிலை புரிந்து கொள்ளப்பட்டது” என்றும் கூறினார்.
இந்நிகழ்வின் போது, கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, கம்பஹா பிரதேச செயலாளர் கே.ஏ.எஸ்.எல். குணதிலக்க, சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சி.டி.களுஆராச்சி, கம்பஹா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஜே.ஏ.டி.எஸ். ஜயசிங்க மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்
