கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று(17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானதல்ல என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சந்தேக நபர்களை கைது செய்ய கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
