“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த பெருந் தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்”

___
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் துறை சம்பள உயர்விற்கு இணையாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1,700/- ரூபா வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அந்த முன்மொழிவுக்கு அமைய, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன , பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பெருந் தோட்ட நிறுவனங்களுடன் (RPC) பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த அதே வேளை பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக, மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கான சம்பள உயர்வை உறுதிப்படுத்த முடிந்தது.
அதன்படிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, கௌரவ ஜனாதிபதி அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750/- ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபா வரை (200 ரூபாவினால்) அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வருகைக்கான கொடுப்பனவாக (Attendance Allowance) 200 ரூபாவை அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,750 ரூபா வரை 400 ரூபாவினால் அதிகரித்து, அவர்களுக்கு ஒரு சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பள உயர்வானது, தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்து கடந்த 200 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சம்பள உயர்வாகும்.
தற்போதைய அரசாங்கம் இந்த சம்பள உயர்வை முன்மொழிந்த தருணம் முதல், எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். இக் கொடுப்பனவுகளை வழங்க முடியாது எனக் கூறி அவர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் செய்திருந்தனர். இதன் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இந்த சம்பள உயர்வு தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது. அதன்படி, அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பணத்தைச் செலுத்துவது தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சு ஆகியன இணைந்து பெருந் தோட்ட நிறுவனங்களுடன் (RPC) (30 ஆம் திகதி) ஒப்பந்தம் செய்யவுள்ளன.
தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதே தேசிய மக்கள் சக்தி அரசின் இலக்காகும்.
ஊடகப்பிரிவு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு.
