ஹட்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மக்கள் மாநாடு’: மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க சூளுரை!
ஹட்டன்: “மலையக தமிழ் மக்களே, விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ், மலையக மக்களின் காணி, வீட்டுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை வலியுறுத்தி பாரிய மக்கள் மாநாடு ஒன்று நேற்று (பெப்ரவரி 04) ஹட்டனில் நடைபெற்றது.
ஹட்டன் கிருஷ்ண பவன் கலாச்சார மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த மாநாட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் (பிரகடனம்):
இந்த மாநாட்டில் 11 அம்சங்களைக் கொண்ட முக்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது.
தேசிய இன அங்கீகாரம்: மலையகத் தமிழர்களை இந்நாட்டின் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து, அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
காணி மற்றும் வீட்டுரிமை: ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 20 பேர்ச்சஸ் காணி மற்றும் தனிவீடு கொண்ட தோட்டக் கிராமங்களை நிறுவுதல்.
சட்டரீதியான சமத்துவம்: தனியார் துறை தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை சட்டத்தின் மூலம் உறுதி செய்தல்.
நிர்வாகக் கட்டுப்பாடு: தோட்ட நிர்வாகங்கள் சிவில் மற்றும் கலாச்சார விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி, அச்செயற்பாடுகளை அரசாங்கமே பொறுப்பேற்றல்.
நவீனமயமாக்கல்: தோட்டத் தொழிலில் நிலவும் அடிமை முறையை ஒழித்து, நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி தொழிலை மேம்படுத்தல்.
பாதுகாப்பு: மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல்.
சிறப்புரைகள்:
மாநாட்டில் உரையாற்றிய துறைசார் நிபுணர்கள் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தனர்:
கொட்டகலை ஆசிரியர் கல்லூரி உப அதிபரும் , பேராதனை பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான ஜே. சத்குருநாதன் -இலங்கையின் தேசியப் பிரச்சினையில் மலையகத் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து விளக்கினார்.
கல்ப ராஜபக்ஷ (பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்): தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், அவற்றிலிருந்து விடுதலையாவதற்கான பொருளாதார வழிகளையும் சுட்டிக்காட்டினார்.
சட்ட்டத்தரணி விஜயகுமார்: மலையக மக்களின் காணி உரிமைகள் மற்றும் இலங்கையின் சட்டப்பரிமாணங்கள் குறித்து உரையாற்றினார்.
2026 ஆம் ஆண்டை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ள ஏற்பாட்டாளர்கள், இந்த இலக்கை அடைய அனைத்து சமூகப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
