ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது லஞ்சமாகப் பெறப்பட்ட பணம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பாரிய ஊழல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பித்த போதே ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்:
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சந்தேகநபரான கபில சந்திரசேன என்பவரால் தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் மகிந்த ராஜபக்சவின் பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து அவரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கும் இதில் ஒரு பகுதி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் வங்கிக் கணக்கிற்கும் இந்தப் பணத்தின் ஒரு பகுதி மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த பாரிய நிதி மோசடி குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
