ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக, நாளை (28) இலங்கைக்குப் பெருமளவிலான எரிபொருள் கிடைக்கவுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பலில் பின்வரும் எரிபொருள் கையிருப்புகள் காணப்படுகின்றன:
டீசல்: 20,000 மெட்ரிக் தொன்
பெட்ரோல்: 18,000 மெட்ரிக் தொன்
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு
இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
“அண்டை நாட்டுக்கு முன்னுரிமை” (Neighborhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சக்திவள ஸ்திரத்தன்மைக்காக இந்தியா முன்னின்று உழைப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் வருகையானது நாட்டின் தற்போதைய எரிபொருள் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் என்றும், தட்டுப்பாடற்ற மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
