புதிய பேருந்து கட்டணப் பட்டியல் கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து!
திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது. இதன்படி:
பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
தொடர்புடைய பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
புதிய கட்டண உயர்வு தொடர்பான முறைகேடுகள் அல்லது மேலதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்கலாம்:
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை:
தொலைபேசி: 011 2860860
வட்ஸ்எப் (WhatsApp): 070 2860860
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC):
அவசர தொலைபேசி: 1955
வட்ஸ்எப் (WhatsApp): 071 2595555
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண மாற்றங்கள்:
குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக உயர்வு.
அதிகபட்ச கட்டணம்: ரூ. 2,159 இல் இருந்து ரூ. 2,422 ஆக உயர்வு. (ரூ. 263 அதிகரிப்பு)
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மேலதிகமாக அறவிடக் கூடாது எனவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
