லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வீடமைப்புத் திட்டம்: பாராளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி!
கொழும்பு: பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழும் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சூறாவளியினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 50 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி, லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு சொந்தமான காணி இல்லாததே இதற்குப் பிரதான காரணமாக அமைந்தது. எனினும், 200 வருடங்களாக இலங்கையில் வாழும் இந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை தற்போது தீர்மானித்துள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது:
சூறாவளியினால் லயன் அறையிலுள்ள வீடு முற்றாகச் சேதமடைந்திருத்தல்.
குறித்த குடியிருப்பு ஆபத்தான பகுதியில் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்திருத்தல்.
லயன் அறைகளை புனரமைப்பதில் எவ்விதப் பயனும் இல்லை எனத் தீர்மானிக்கப்படுதல்.
நிவாரணத்தின் விபரங்கள்:
தகுதியான குடும்பங்களுக்கு 10 பேர்ச் காணியுடன் சேர்த்து, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படும். அத்துடன், வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு வேறு இடத்தில் வீடொன்றை கொள்வனவு செய்யவோ அல்லது அவர்களுக்குச் சொந்தமான காணி இருப்பின் அங்கு வீட்டை நிர்மாணிக்கவோ அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பகுதியளவில் சேதமடைந்த லயன் அறைகளை புனரமைப்பதற்கும் உரிய நிதி வழங்கப்படாமல் இருந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளையும் அரசாங்கத்தின் ஊடாகவே புனரமைத்து வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன பாராளுமன்றத்தில் மேலும் உறுதியளித்தார்.
