மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்கள் கடந்த திங்கட்கிழமை (11) காலை முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த நிலையில், தனமல்வில சர்வோதய சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையின் போது சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.
வெல்லவாய திசையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், பின்னால் இருந்த சிறுமியைத் தனது “தங்கை” எனக் கூறி தப்பிக்க முயன்றார். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த தனமல்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததில், கடத்தப்பட்ட மாணவி அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணமான இளைஞர் ஆவார்.மாணவியைச் சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், மீட்கப்பட்ட மாணவியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அத்திமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தனமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டார தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுவர் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தொடர்பான சட்ட திட்டங்களின்படி சந்தேக நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
