அதிகாரவர்த்தை தோட்டத் தாக்குதல்: உரிமைக் குரலை நசுக்கும் நிர்வாக அடக்குமுறை !
என இராமசுந்தரம் ரகுராஜ் வலியுறுத்தல்
உடபுச்சல்லாவ பகுதியில் அமைந்துள்ள அதிகாரவர்த்தை (Thelmont Estate) தோட்டத்தில் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் மலையகப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா நிரோஷன் என்ற இளைஞரின் தாயார் பரணி, தனது ஓய்வூதிய கொடுப்பனவைப் பெறுவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க நேற்று காலை தோட்ட அலுவலகத்திற்குச் சென்ற நிரோஷனுக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் வன்முறையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது நிர்வாக அதிகாரிகள் நிரோஷன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நிரோஷன் முதலில் உடபுச்சல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த
* சேனன் ரொட்ரிகோ
* தினேஷ் எதிரிசிங்க
* துமிந்த
ஆகியோர் உடபுச்சல்லாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஐக்கிய தொழிலாளர் முன்னணி கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக அதன் பொதுச்செயலாளர் இராமசுந்தரம் ரகுராஜ் தெரிவித்துள்ளார்.
“தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை கேட்கும் போதே அச்சுறுத்தல் மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது மனிதாபிமானமற்ற செயல். உழைத்த தொழிலாளிக்கு உரிய பணத்தைப் பெற்றுக்கொடுப்பது குற்றமல்ல; அதை கேட்கும் மக்களை அடக்குமுறையால் மௌனப்படுத்த முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை- சுரேஷ்
