நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரின் ஏற்பாட்டில், மக்களுக்கு அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அசுவெசும (Aswesuma) நலன்புரித் திட்டம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வானது நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து விழிப்புணர்வுப் பாதயாத்திரையாகப் புறப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும், நுவரெலியா பிரதான வீதி ஊடாக தபால் நிலைய வீதியை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டப் பகுதியில், இந்த விழிப்புணர்வுக்கான விசேட வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
பொதுமக்களுக்கு அரசினால் வழங்கப்படக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களையும் உரிமைகளையும், தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் (Gramasewaka) ஊடாக எவ்வாறு மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து இந்த வீதி நாடகத்தின் மூலம் மிகத் தெளிவாகவும், சுவாரசியமாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அசுவெசும கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறாத தகுதியுடைய பயனாளிகள், நழிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நலன்புரிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா
