டிக் டொக்’ (TikTok) பார்ப்பதற்காகத் தன் கைபேசியைத் தர மறுத்த 11 வயதுச் சொந்தச் சகோதரியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தைக் குளியலறைத் தண்ணீர் தொட்டியில் வீசிய குற்றச்சாட்டின் கீழ் 14 வயதுச் சிறுவன் ஒருவனை ஏறாவூர் பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் ஏறாவூர்றில் கடந்த வியாழக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்11 வயதுச் சிறுமியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தந்தையார் சம்பவ தினத்தன்று வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்துள்ளார். இதனால் வீட்டில் 14 வயதுடைய அண்ணனும், 11 வயதுடைய தங்கையும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.
இதன்போது, ‘டிக் டொக்’ பார்ப்பதற்காகத் தங்கையிடம் இருந்த கைபேசியை அண்ணன் கேட்டுள்ளார். அதற்குத் தங்கை மறுக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 14 வயதுச் சிறுவன், தன் தங்கையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், குற்றத்தை மறைப்பதற்காகத் தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளார். பின்னர், ஒன்றும் தெரியாதது போல வீட்டிலிருந்து வெளியேறி, பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தை, பிள்ளைகளைக் காணாது தேடியுள்ளார். இதன்போது, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மகளை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் கொண்ட ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, 14 வயதுச் சிறுவன் முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கியதை அடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அவரே தன் சகோதரியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுவனைக் கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
