மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் நேற்று (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் மோசடித் தகவல்கள் வௌியாகியுள்ளன.
கைதான சந்தேகநபர், உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிள்ளைகளை வீதியில் வைத்து பிச்சை எடுத்து பெரும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயாரைப் பார்ப்பதற்காக, தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகளும் பதுளையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வந்திருந்ததாகவே கூறப்பட்டது.
இதன்போது அவர்கள் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில், கடந்த புதன்கிழமை (27) விடுதி அறைக்குள் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் மூச்சுத் திணறலால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாட்டிக்கொண்ட போலி அடையாள அட்டை
இந்த மரணங்கள் குறித்து விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார், குறித்த தந்தையின் தேசிய அடையாள அட்டையைப் பரீசீலித்த போது அது போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை வேறு ஒரு நபருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின்படி, அந்த அடையாள அட்டைக்கு சொந்தமான உண்மையான நபர் பதுளையைச் சேர்ந்தவர் என்பதும், அவரது அடையாள அட்டை கடந்த 2023ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில், அவர் சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருகிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன அந்த அடையாள அட்டையைத் தம்முடையது எனக் காண்பித்து, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் பல்வேறு குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில், சந்தேகநபரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்ட கதையும் அப்பட்டமான பொய் என வௌியாகியுள்ளது. அவரது மனைவி மாத்தறையில் உள்ள தனது வீட்டில் ஆரோக்கியமாக இருப்பதாக பொilisார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனது சுயலாபத்திற்காக, மனைவிக்கு புற்றுநோய் என்ற போலி அனுதாப அலையை உருவாக்கி, பல மாவட்டங்களில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கைதான இந்த சந்தேகநபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகள் காணப்படுவதோடு, அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை (Warrant) ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல நாட்களாக பொலிஸாருக்கு தப்பி ஓடித் திரிந்த நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று (28) இரவு அவர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டார். அத்துடன், இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக அவரது தாயாரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கோர விபத்து மற்றும் பாரிய மோசடிச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
