இலங்கையில் காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், எதிர்பாராத நட்டங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் இப்புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
தவணைக்கட்டணம் (Premium): 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை, 3 மாத காலப்பகுதிக்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணமாக சுமார் 2,025 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி இழப்பீடு (Claim): காளான் பயிர்ச்செய்கையின் போது நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக சேதங்கள் ஏற்பட்டால், 22,500 ரூபா காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தகுதி: விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இக்காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாவர்.
பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத இயற்கை மற்றும் நோய் சார் நட்டங்களில் இருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இலங்கையில் காளான் வளர்ப்பை ஒரு பிரதான வாழ்வாதாரத் தொழிலாக ஊக்குவித்து பிரபலப்படுத்துவதற்காகவே விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை இம்முயற்சியை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
