மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, இதுவரை முன்னடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (24.07.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ்ப் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அனைத்தையும் செவிமடுத்த ஜனாதிபதியிடமிருந்து சாதமான பதில் கிடைத்தது.
இந்தக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ஏனைய மக்களுடன் மலையக மக்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது.. இவர்களுக்கு அதிகமாக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இம்மக்களை முன்னோக்கி கொண்டு வரவேண்டும். எனவே பெருந்தோட்ட கம்பனிகள் சார்ந்த நிறுவனங்களை மீள்கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடினார்.
அத்துடன் பெருந்தோட்ட கம்பெனிகளின் குத்தகை மற்றும் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் தோட்டங்கள் பற்றியும் மீளாய்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது..அதன் போது அவற்றில் வாழும் மலையக மக்களின் நலன் மற்றும் அத் தோட்டங்கள் ஈட்டும் வருமானம் என்பன பற்றி கருத்தில் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது
அத்துடன் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன? இது தனியாக இயங்குவது ஆரோக்கியமானதா அல்லது அமைச்சின் கீ்ழ் இயங்குவது சிறப்பானதா என்பது தொடர்பாக எமது அமைச்சு அறிக்கையென்றை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அதிகாரிகளிடம் முன்வைத்த ஜனாதிபதி, குறித்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் அடுத்த வருடம் புதிய வீட்டுத்திட்டத்துக்கான குழுவொன்றை அமைத்து அதற்கான பணிகளை ஆரம்பிக்கமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
