பலாங்கொடை, மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த அவசரத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை காலையில் குறித்த சிறுமி வீட்டை விட்டு திடீரெனக் காணாமல் போயுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தையால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.
இது கொலையா? தற்கொலையா?அல்லது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா?என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் பலாங்கொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மைச் காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
