கடந்த 04 நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் அளவிலான மிக உயர்ந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு நாளில் மட்டும் அப்பகுதியில் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இது நேற்று பதிவான மிக உயர்ந்த மழைவீழ்ச்சி அளவாகும். அத்துடன், அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 3 நாட்களில் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாகக் குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவது தற்போது சாதாரண நிகழ்வாக மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி வசந்த சேனாதீர, இந்த நிலைமையை முன்னர் பதிவான ‘திட்வா’ சூறாவளி காலத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதால், அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
