குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையானது வன்முறையாக மாறியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 15ஆக அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு குருவிட்ட சிறைச்சாலையில் தோன்றிய பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் கைதிகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் (STF), கலகத்தடுப்புப் பிரிவினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
