நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதைத் திருத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு:
அரசியலமைப்பின் 107(5) உறுப்புரை திருத்தப்படுவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசரின் பதவிக் காலம்:
பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளிலிருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற புதிய சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:
அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை “12 பேருக்கு மிகாமல்” என்பதற்குப் பதிலாக “24 பேருக்கு மிகாமல்” என உயர்த்தித் திருத்தப்படுகிறது.
நீதித்துறைச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், தேங்கிக்கிடைக்கும் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணவுமே இத்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
