எல்ல (Ella) பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான பல்வேறு பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 26 வருடங்களாக எவ்வித புனரமைப்புப் பணிகளும் இன்றி காணப்பட்டதும், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படுவதுமான எல்ல வாட்டர்போல் வீதி (Waterfall Road) கொங்கிரீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பின்வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன:
துன்ஹிந்த – பல்லகெடுவ – தெமோதரை வீதி – 500 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
எல்ல – பஸ்சர வீதி – 370 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
கந்தேகும்புக வீதி – 270 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
பியரபந்தொவ வீதி – 59 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
மேலும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மேலதிகமாக எல்ல நகரத்தின் சுற்றுலா ஈர்ப்பை மேம்படுத்துவதற்காகப் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
எல்ல நகருக்குள் நுழைவதற்காகப் புதிய சுரங்கப்பாதை (Tunnel) ஒன்று அமைக்கப்படவுள்ளது.
நகர மத்தியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் (RDA) சொந்தமான 2.5 ஏக்கர் நிலப்பரப்பு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் 50 மில்லியன் ரூபாய் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன சுற்றுலா வளாகம், வர்த்தக மையம் மற்றும் கண்காட்சிக் கூடங்கள் அடங்கிய ஒரு பிரம்மாண்ட வளாகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
எல்ல நகரத்தில் நிலவும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான குப்பைக் குன்று, எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த நிலப்பரப்பு அழகுபடுத்தப்படவுள்ளது. இதற்காக பிரதேச சபை மற்றும் இராணுவத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென வெல்லவாய ஆனபல்லம பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் புதிய குப்பை கொட்டும் முற்றம் (Dump Yard) ஒன்றை அமைப்பதற்கும், குப்பைகளை சேகரிப்பதற்கான போக்குவரத்து சேவைகளுக்காக மேலும் 10 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
